Wednesday, October 28, 2009

நம்முடைய உறவுகள் எப்படி இருக்கின்றன?


முந்தைய காலத்தில் உடைந்த வீடுகளிலும் , ஓலைக் குடிசையிலும் வாழ்ந்தவர்களின் , குடும்ப உறவுகளும் , கணவன் மனைவி உறவுகளும் உடையாமலும் , மிகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் இன்று பங்களாவிலும் , பெரிய வீடுகளில் வாழுபவர்களின் எல்லாவிதமான உறவுகளும் உடைந்தும் , சிதறியும் கிடக்கின்றன.

உறவு என்றால் என்ன? அதை எப்படி புரிந்து கொண்டால் உறவுகள்ப் பிளவு படாமல் பார்த்துக் கொள்ளலாம். உறவு என்பது நம் தாய் , தந்தை , தந்தையின் உடன் பிறந்தவர்கள் அல்லது தாயின் உடன் பிறந்தவர்கள் மட்டும் அல்ல. நட்பும் ஓர் உறவுதான் , நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்துத் தரப்பினரும் நமக்கு மனிதன் என்ற உறவுதான்.

உறவு ஏன் உடைகிறது? அதிகம் கல்வி அறிவு இல்லாத காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எப்படி ஒரே கூட்டுக் குடும்பமாக பல ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு அந்த உறவின் அறிவைச் சொல்லிக் கொடுத்தது யார். அவர்களை அழைத்து வந்து நாம் இந்த உறவு முறையை பற்றி கேட்டால், நாம் இவன் படிக்காதவன் இவனுக்கு என்ன தெரியும் என்று சொல்லிவிடுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு வீட்டில் இருந்தாலும் தனி , தனி அறைகளில்தான் தீவு போல வாழ்ந்து வருகின்றோம். ஒருவேளை நமது உறவுகளின் பலம் இல்லாமல் போனதிற்கு நாம் கல்வி கற்றது காரணமாக இருக்குமோ அல்லது மிகவும் முற்போக்குத்தனமாக சிந்திப்பது காரணமாக இருக்குமோ?.

உறவுகளை எப்படி பலப்படுத்தலாம்? உறவுகள் நம்மை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைப்பார்கள் அல்லது எப்படி நாம் அவர்களாள் பயனடையப் போகிறோம் என்பதை விட நாம் நம்முடைய உறவுகளை எப்படி மகிழ்ச்சியாக வாழ வைக்கபோகிறோம் அல்லது நம்மால் அவர்கள் எப்படி பயனடைய போகிறார்கள் என்ற உண்மையான உணர்வுடன் உறவைப் போற்றி வளர்த்தால் நம்முடைய உறவுகள் ஆழமாகவும் நீண்ட காலமும் இருக்கும். நம் உறவுகளிடையே உள்ள மனக் கசப்புகளை மறப்போம் , வீணான தலைக்கனங்களைக் கைவிடுவோம். உறவுகளை போற்றுவோம் மற்றும் நம்முடைய உறவுகளுக்கு உரமிடுவோம், பழைய உறவுகளைப் புதுமைப் படுத்துவோம் . உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்போம். உறவுகளைப் போற்றுவோம்.