
எல்லோருடைய மனதிலும் எழுகின்ற எண்ணம் தான் இது ஏதாவது சாதிக்க வேண்டும்,சாதிப்போம் என்பது ஒரு நம்பிக்கை. நம் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோள். எதையாவது சாதிக்க வேண்டும் என்பவர்களை விட, எதைச் சாதிக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுள்ளவர்கள் தாங்கள் தொட வேண்டிய இலக்கை எளிமையாகத் தொடுகின்றார்கள். ஒவ்வொவருக்கும் வெவ்வேறு தளத்தில் அல்லது துறையில் சாதிக்க வேண்டும் அல்லது தடம் பதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் பெரிய பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, பொதுநலவாதியாக அவர்களுடைய மனதைப் பொறுத்து அவர்களுடைய எண்ணங்கள் இருக்கும். ஒரு சிலருடைய எண்ணம் அவர்களுடைய தனிப்பட்டவைகளாக இருக்கும். ஒரு சிலருடைய பொதுவான சிந்தனையாக அல்லது ஒரு சமுதாயத்தைச் சார்ந்த சிந்தனையாக இருக்கும்.
தனிப்பட்ட சிந்தனையுள்ளவர்கள், அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்று அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் அல்லது அவர்கள் செய்யும் தொழிலில் புதிதாகச் சாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். இவர்களை நாம் எந்தக்குறை சொல்லவும் முடியாது. எனென்றால் அவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் இயற்கையான அன்பின் பிரதிபலிப்பு. இதனால் அவர்கள் எடுக்கும் முயற்சிக்குக் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். மனதில் ஒரு உணர்வு இருந்தால்தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். இவர்களை யதார்த்தவாதிகளோடு ஒப்பிடும்போது பரவாயில்லை தானும் , தன் குடும்பமும் மற்றவர்களிடம் இருந்து எதாவது ஒன்றில் தனித்துக் காட்ட வேண்டும் என்பதில் எந்தக் குற்றமும் இல்லை.
பொதுவான ஒரு விஷயத்தில் அல்லது சமுதாயத்திற்காக சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். முதலில் அவர்கள் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு இருக்கும். முதலில் யாருக்கு ஒரு சமுதாயத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் என்றால், சமுதாயத்தில் ஒரு தவறு நடக்கும் பொழுது அவனுடைய மனதில்த தட்டிக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களால் தான் முடியும். இவர்களுக்கு மன உறுதி அதிகமாகவே இருக்கும். இவர்களின் செயல்களில் நல்லது இருந்தால் ஆதரவு பெருகும். இவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக செயல்படுவார்கள். இவர்கள் மறைந்தாலும் இவர்களின் செயல்கள் பலருக்கு எடுத்துகாட்டாக இருக்கும்.
ஒரு சிலரின் மனநிலை ஏதோ பிறந்தோம், நம் காலம் முடியும் வரை வாழ்ந்து விட்டு செல்வோம் என்பதில் எந்தப் பொருளும் இல்லை.நாமும் எந்த பிரச்சினைக்கும் செல்லக்கூடாது, நமக்கும் எந்த பிரச்சிசனையும் வரக்கூடாது என்று இருந்தால் , நம்மால் சந்திக்க முடியவில்லை, நாம் சந்திக்கப் பயப்படுகிறோம் என்பதைக் காட்டுகிறது. நம் மீது நம்மை விட வேறு யார் நம்பிக்கை வைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக ஒரு தென்னை மரத்தின் மட்டையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு தென்னைமட்டையின் ஆயுள் காலம் 6 மாதம் தான், அது மரத்தில் இருக்கும் பொழுது தேங்காயைத் தாங்குகிறது, தேங்காய் பறிக்க செல்லும் மனிதர்களைத் தாங்குகிறது. அது காய்ந்து விழுந்தாலும் அதன் ஓலை பந்தல் போடுவதற்க்குக் கீற்றாகவும், ஓலையிலிருந்து பிரிக்கப்படும் குச்சி துடைப்பானகவும் பயன்படுகிறது. ஆறு மாதமே மரத்தில் இருக்கும் மட்டை விழும் பொழுது ஒரு தடத்தைப் பதிவு செய்கிறது. அந்தத் தடம் கூட மரம் ஏறுவதற்கு வசதியாக உராய்வை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 60 ஆண்டு காலம். நாம் எவ்வாறு நம் தடத்தை இந்த சமூதாயத்திற்காக இந்த பூமியில் என்ன பதிவு செய்ய உள்ளோம்?.