Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

Monday, March 23, 2009

யார் குற்றவாளி?

பொதுவாக நமக்கு ஓர் எண்ணம் சிறையில் இருப்பவர்கள் அல்லது சிறை சென்றுவந்தவர்கள் எல்லோரும் தவறானவர்கள் , குற்றவாளிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தால் சற்று விலகி நிற்கின்றோம். நமக்கு அந்த எண்ணம் வரக்காரணம் குற்றவாளிகளையும் , நீதிக்காக அல்லது உரிமைக்காகப் போராடுபவர்களையும் ஒரே சிறையில் வைத்து இருப்பதால்.

நாம் நம்மை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம் நான் காவல் நிலையம் சென்றதில்லை, சிறைச்சாலை சென்றதில்லை என்று, அது நம்முடைய தவறான எண்ணம் உண்மையிலே நாம் தான் இந்த சமுதாயத்தில் பெரிய குற்றவாளிகள்.

நாம் கொஞ்சம் உணர்வு உள்ளவர்களாக அல்லது சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் திராணி உள்ளவர்களாக இருந்து இருந்து இருந்தால் நாம் ஒருமுறையாவது நீதிமன்றம் , காவல் நிலையம் அல்லது சிறைச்சாலை சென்று வந்து இருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் சமரசத்துக்கு உட்பட்டவர்கள். நாம் இந்த பிரச்சனை நம்மை விட்டு விலகிப் போனால் போதும் வேறு யாரவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளையும் , சமுக விரோதச் செயல்களையும் கண்டும் காணமல் விட்டு விடுகிறோம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்கிறோம். அல்லது அந்த பிரச்சனைக்குரியவர்களுடன் சமரசத்துக்குச் செல்கின்றோம். இதற்கு என்ன காரணம் , பொதுவாக சமுதாய பிரச்சனைகளுக்கு நாம் செல்லும் பொது குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை, சமுதாயம் நமக்கு ஒத்துழைப்பதில்லை எனவே நாம் பொதுவான பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று நமக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நமது மனதைத் தேற்றி கொள்கின்றோம்.

ஆனால் நம்முடைய உறவினர்களுடைய அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்துகளை அவர்களை உரிமைகளை அபகரிப்பதற்கு நாம் எங்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். இதில் இருக்கும் முனைப்பை எதாவது ஒரு நல்ல செயலில் காட்டியிருத்தால் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் , சமுதாயத்தில் நம்முடைய வழிகாட்டிகளாகவும், நாம் மிகவும் போற்றும் தலைவர்கள் , நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவும் , உரிமைகளுக்காகவும் பல முறை சிறை சென்று வந்தவர்கள்தான். இன்று உலகம் பின் பற்றும் போராளிகள் அனைவருக்கும் முதலில் அவர்களின் முயற்சிக்கும், அவர்களின் உறுதியான செயல்பாடுகளுக்கும் போதிய ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும் அவர்கள் சளைக்காமல் திரும்பத் திரும்ப போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.

எனவே நாம் சமுதாயத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளுக்கு ஆதரவு தராமலும் , நாமும் தவறுகள் செய்யாமலும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்போம். எப்பொழுதும் தவறான சமரசத்துக்கு உட்படாமல் இருப்போம். நேர்மயையான , வலிமையான சமுதாயத்தைப் படைப்போம்

Thursday, October 16, 2008

தோல்வி.

தோல்வியை நாம் தான்
தாங்க வேண்டும்- எனவே
மற்றவர்களை எதிர்பார்க்காமல் நம்
மனது கூறியதைச் செய்வோம்.

நம்மிடம் வலிமையான
இதயம் இருக்கும் பொழுது - நம்
தோல்விக்கு மற்றவர்களைக்
காரணம் காட்டுவது கோழைத்தனம்

எதையும் துணிவுடன் எதிர்கொள்வோம்
உறுதியான மனதுடன் இருப்போம்- யாரையும்
எதிர்பார்க்காமல் முழுமையாக முயற்சி செய்வோம்
வெற்றியின் இனிமையை ருசிப்போம்.

தோல்விக்குக் காரணமான
பயத்தைப் போக்குவோம் - நம்முடைய
மனதை ஒருநிலைப் படுத்துவோம்
தோல்வியின் ஆணிவேரை அறுப்போம்.

Thursday, September 25, 2008

உணர்வான உணர்ச்சி.

உணர்ச்சி என்பது என்ன?. வெளியில் இருந்து ஒன்று நம்மை எதாவது ஒரு விதத்தில் அதாவது தொடுதல் அல்லது நம் மனதைப் பாதிக்கும்படி நடக்கும் செயல் என்பது உணர்ச்சியாகும். உணர்ச்சி என்பது சில நொடிகள் , சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் தான் நீடிக்கும்.உணர்ச்சி என்பது உடலில் ஏற்படும் மாற்றம்.

உணர்வு என்பது ஓர் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு அதை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து , நாம் கொடுக்கும் வெளிப்பாடு. உணர்வு நம் மனதில் எப்போதும் ஓடும் ஒரு நிகழ்வு. உணர்வு என்பது மனதில் ஏற்ப்படும் மாற்றம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவை விட, உணர்ந்து எடுக்கும் முடிவே சிறந்தது என்று ஒரு பொன்மொழி உண்டு.

ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வேண்டும் இல்லை என்றால் அவன் இறந்தவனுக்குச் சமம். ஆனால் அவன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை பாதிக்காதவண்ணமும் , அவனைப் பாதிக்காதவண்ணமுமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நாம் உடனே எடுக்கும் முடிவு பல பின்விளைவுகளை உண்டாக்கும். அது அவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பேச்சு , செய்யும் செயல் மற்றும் எடுக்கும் முடிவு நாம் அதை செய்யும் நேரம் சரி என்று தெரியும் .உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு மிகக்குறுகிய நேரத்தில் முடிந்து விடும். பின்னால் அந்த செயலை நினைத்துப் பார்த்தல் மிக கொடுமையான முடிவாக இருக்கும். இந்த சில மணித்துளிகள் ஏற்ப்படும் உணர்ச்சிகளால் சில நல்ல செயல்களும் நடைபெறும் , பல தவறான செயல்களும் நடைபெறும்.

உணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று , எல்லா மனிதர்களுக்கும் உணர்வு இருக்கும் . நம்முடைய உணர்வை யார் மதிக்கின்றார்களோ அவர்கள் நமக்கு மிகப்பெரியவர்களாக தெரிவார்கள். நம்முடைய உணர்வை யாரும் அதாவது நமக்கு உரிமைப் பட்டவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். நம் மனதில் தோன்றும் அனைத்துமே உணர்வுதான். நம்முடைய உண்ர்வு மிக மிகச்சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உணர்வு தெளிவாக, உண்மையாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக பசி என்பது கூட ஓர் உணர்வுதான் , அந்த நேரத்தில் நமக்கு யார் உணவு தர முன்வருகின்றார்களோ அவர்கள் அந்த நேரத்தில் அவர் நமக்குத் மிகப்பெரிய ஆளாக தெரிவார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் நம் குடும்ப உறுப்பினர்களுடைய நல்ல ஆரோக்கியமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் குடும்பம் மிக அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு மனைவி அவள் கணவனுடைய உணர்வை மதிக்க வேண்டும். ஒரு கணவன் அவன் மனைவியுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும்.ஒருவர் தன்னை போல் மற்றவருக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவேண்டும். இதில் வீணான தலைக்கனம் காட்டத் தேவை இல்லை. அப்பொழுதான் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

உணர்வும் , உணர்ச்சியும் தனித்தனியாக செயல்பட்டால் பிரச்சனை தான். நம்முடைய ஆரோக்கியமான உணர்வை வெளிப்படுத்த உணர்ச்சி தேவை. உணர்வு மட்டும் தனியாக இருந்ததால் பயனில்லை. உணர்ச்சியின் வெளிப்பாடு உணர்ந்து வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு குறுகிய நேரத்தில் எடுக்கும் முடிவு , நாம் எடுக்கும் தைரியமான முடிவு என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனம் அதன் பின்விளைவுகள் மிக அதிகமாக இருக்கும் . உணர்ந்து எடுக்கும் முடிவு தாமதமாக இருந்ததாலும் அதன் வெளிப்பாடு சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மக்களின் உணர்ச்சியுடன் கூடிய உணர்வான போராட்டம் பல வெற்றிகளை தந்திருக்கிறது. நம் குடும்பம் , நாடு , மொழி என்ற உணர்வு இருந்தால்தான் அதன் மேல் ஒரு பற்று வரும். நாம் சாதிக்க வேண்டும் , வாழ்வில் உயர வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் போதாது .அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே சாதிக்கலாம். எனவே உணர்வான உணர்ச்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.

Tuesday, July 8, 2008

திண்ணை


திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு த்தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன ? அதன் பயன் என்ன ! அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றிப் பார்ப்போம்.

அமைப்பு:
திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலைத் தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையைத் தாங்கி பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.





பயன்:
பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒர் இடத்தில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களைக் கொஞ்சம் இளைப்பாற்றிக் கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீட்ற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதற்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்குச் செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன்ப் படுத்துவார்கள்.

சமுகப்பயன்பாடுகள்:
பழங்காலத்தில் திண்ணையில் பள்ளிக் கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒர் வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டுத் திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.

இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:
இன்றையகாலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்றுச் சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்துக் கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விடத் தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் திண்ணை வீட்டுக் காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுக்காரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாகப் பேசிப் பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களையும்,பிரச்சினைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்தனையும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனையும் மேற்கோள் காட்டியே கண்டுபிடிகபட்டது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.
பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைக்கழகமாகவும் இருந்துள்ளது.

குழந்தை மனம் போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன்படி வளர்ப்போம்.