Showing posts with label டொமினிக். Show all posts
Showing posts with label டொமினிக். Show all posts

Monday, March 23, 2009

யார் குற்றவாளி?

பொதுவாக நமக்கு ஓர் எண்ணம் சிறையில் இருப்பவர்கள் அல்லது சிறை சென்றுவந்தவர்கள் எல்லோரும் தவறானவர்கள் , குற்றவாளிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தால் சற்று விலகி நிற்கின்றோம். நமக்கு அந்த எண்ணம் வரக்காரணம் குற்றவாளிகளையும் , நீதிக்காக அல்லது உரிமைக்காகப் போராடுபவர்களையும் ஒரே சிறையில் வைத்து இருப்பதால்.

நாம் நம்மை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம் நான் காவல் நிலையம் சென்றதில்லை, சிறைச்சாலை சென்றதில்லை என்று, அது நம்முடைய தவறான எண்ணம் உண்மையிலே நாம் தான் இந்த சமுதாயத்தில் பெரிய குற்றவாளிகள்.

நாம் கொஞ்சம் உணர்வு உள்ளவர்களாக அல்லது சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் திராணி உள்ளவர்களாக இருந்து இருந்து இருந்தால் நாம் ஒருமுறையாவது நீதிமன்றம் , காவல் நிலையம் அல்லது சிறைச்சாலை சென்று வந்து இருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் சமரசத்துக்கு உட்பட்டவர்கள். நாம் இந்த பிரச்சனை நம்மை விட்டு விலகிப் போனால் போதும் வேறு யாரவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளையும் , சமுக விரோதச் செயல்களையும் கண்டும் காணமல் விட்டு விடுகிறோம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்கிறோம். அல்லது அந்த பிரச்சனைக்குரியவர்களுடன் சமரசத்துக்குச் செல்கின்றோம். இதற்கு என்ன காரணம் , பொதுவாக சமுதாய பிரச்சனைகளுக்கு நாம் செல்லும் பொது குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை, சமுதாயம் நமக்கு ஒத்துழைப்பதில்லை எனவே நாம் பொதுவான பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று நமக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நமது மனதைத் தேற்றி கொள்கின்றோம்.

ஆனால் நம்முடைய உறவினர்களுடைய அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்துகளை அவர்களை உரிமைகளை அபகரிப்பதற்கு நாம் எங்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். இதில் இருக்கும் முனைப்பை எதாவது ஒரு நல்ல செயலில் காட்டியிருத்தால் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் , சமுதாயத்தில் நம்முடைய வழிகாட்டிகளாகவும், நாம் மிகவும் போற்றும் தலைவர்கள் , நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவும் , உரிமைகளுக்காகவும் பல முறை சிறை சென்று வந்தவர்கள்தான். இன்று உலகம் பின் பற்றும் போராளிகள் அனைவருக்கும் முதலில் அவர்களின் முயற்சிக்கும், அவர்களின் உறுதியான செயல்பாடுகளுக்கும் போதிய ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும் அவர்கள் சளைக்காமல் திரும்பத் திரும்ப போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.

எனவே நாம் சமுதாயத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளுக்கு ஆதரவு தராமலும் , நாமும் தவறுகள் செய்யாமலும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்போம். எப்பொழுதும் தவறான சமரசத்துக்கு உட்படாமல் இருப்போம். நேர்மயையான , வலிமையான சமுதாயத்தைப் படைப்போம்

Saturday, February 14, 2009

காதல் ஒரு சாயம்.

மனம் உன்னைத் தினமும்
எண்ணம் எவ்வண்ணமும் - உன்னை
நோக்கி இருப்பதால் மறக்கின்றேன்
என்னுடைய அன்றாட பணிகளை -நீயும்
என்னைபோல் இருப்பாய் என்று

நீ எப்படி நினைக்கிறாய்
நீ என்னிடம் என்ன மறைக்கிறாய்- உள்ளம்
கேட்கிறது உதடு தடுக்கிறது
சந்தேகம் வலுக்கிறது பிரிக்கிறது -காதலை
உடைக்கிறது மனதை

எனக்கு ஒரு மரபு
உனக்கு ஒரு மரபு - எனக்கு
ஆசை உண்டு ஆனால்
உனக்கு எந்த ஆசையும் - இருக்கக்
கூடாது என்னைத் தவிர

நீ ஒரு பொம்மை
என்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்
கண்ணை மூட வேண்டும்
மற்றவர்களைப் பார்க்கும் பொழுது

நான் சுயநலவாதி
நான் சாதாரன மனிதன் - எனக்கு
என் மகிழ்ச்சி தான்
என் மனநிறைவு - நீ
வேண்டும் எனக்கு இந்த
வீணாய்ப் போன உலகத்தை- மறக்க
என் சுகத்தைக் கூட்ட.

ஏன் காதலிக்க வேண்டும்
உன்னுடன் சுற்றிய நேரத்தை -சரியாக
பயன் படுத்திருந்தால் நிலவின்
பாதி தொலைவைக் கடந்திருப்பேன் -உலகை
இரண்டு தடவை சுற்றியிருப்பேன்

பெண்ணுடன் தொலைபேசியில் பேசிய நேரத்தில்
சமூகத்துக்காகப் பேசியிருந்தால் -மக்கள்
பயனடைந்திருப்பார்கள் அந்த தொலைபேசி
தொகையில் ஒரு உடன்பிறப்பிற்கு -முழுமையான
கல்வி கொடுத்திருந்தக்கலாம்.

என்று போராளிகள் சொல்லும்
பொழுது போங்கடா என்று -கேலி
செய்தேன் அவர்கள் எனக்கு
போராடி பெற்று கொடுத்த - இந்த
பாது காப்பான இடத்தில் இருந்து.

பிறகு தெரிந்தது காதல்
சாயம் பூசப்பட்ட துணி -ஒரு
சலவையில் தெரிந்து விடும்
உண்மையான வண்ணம்

Thursday, October 16, 2008

தோல்வி.

தோல்வியை நாம் தான்
தாங்க வேண்டும்- எனவே
மற்றவர்களை எதிர்பார்க்காமல் நம்
மனது கூறியதைச் செய்வோம்.

நம்மிடம் வலிமையான
இதயம் இருக்கும் பொழுது - நம்
தோல்விக்கு மற்றவர்களைக்
காரணம் காட்டுவது கோழைத்தனம்

எதையும் துணிவுடன் எதிர்கொள்வோம்
உறுதியான மனதுடன் இருப்போம்- யாரையும்
எதிர்பார்க்காமல் முழுமையாக முயற்சி செய்வோம்
வெற்றியின் இனிமையை ருசிப்போம்.

தோல்விக்குக் காரணமான
பயத்தைப் போக்குவோம் - நம்முடைய
மனதை ஒருநிலைப் படுத்துவோம்
தோல்வியின் ஆணிவேரை அறுப்போம்.

Friday, October 3, 2008

தளர்ச்சி.

தளர்ச்சியை நாம் இரண்டுவகையில் உணரலாம் ஒன்று உடல் ரீதியான தளர்ச்சி மற்றொன்று மன ரீதியான தளர்ச்சி. உடல் ரீதியான தளர்ச்சியை மருத்துவ முறையில் சரி செய்து கொள்ளலாம். மனத் தளர்ச்சியை ஆற அமர்ந்து யோசித்து சரி செய்து கொள்ளலாம். நம் மனத் தளர்ச்சியால் உடலும் தளர்ச்சியுறும். எனவே மனத் தளர்ச்சியின் போது துவண்டு விடாமல் மனதை திடபப்டுத்திக்கொண்டு செயல்பட்டால் வெற்றி கனியை பறிக்கலாம். நம் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கும் தலைவர்கள் எல்லாம் தளர்ச்சியயை உடைத்து எறிந்து வந்தவர்கள்தான். எந்த ஒரு சிறு வெற்றியும் தளர்ச்சி இல்லாத உழைப்பால்தான் கிடைக்கும்.

நமக்குத் தளர்ச்சி என்பது எப்பொழுது வருகிறது என்று பார்த்தால் நாம் ஏதோ ஒன்றில் தோல்வியைத் தழுவும் போது அல்லது நாம் நினைத்துச் செயல் படும் காரியங்களில் ஏமாற்றம் ஏற்படும் பொழுது. தளர்ச்சி ஏற்ப்படும், மனது வருத்தப்படும் என்பது உண்மைதான். நாம் அந்த நேரத்தில் பலவாறு குழம்பிப் போய் இருக்கலாம். நாம் எடுத்த தவறான முடிவால்தான் இந்த நிலைமைக்குத் தள்ளப் பட்ட்டுவிட்டோமா அல்லது நாம் தேர்ந்து எடுத்த பாதை சரிதான என்று வருத்தப்படலாம் , இந்த நேரத்தில் மனம் பலகோணங்களில் யோசித்து, நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியுமா மீண்டும் நமது இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர முடியுமா என்ற எண்ணங்கள் வரலாம். நாம் இந்த நேரத்தில் நம் தோல்வியை மட்டும் பாராமல் , அதற்கு முன் நாம் பெற்ற வெற்றிகளை நினைத்து பார்த்தல் நம்முடைய இந்த துயரத்தில் இருந்து வெளிவர அது உதவியாக இருக்கும்.

நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். நாம் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வி ஏற்ப்பட்டால் சோர்ந்து போகாமல் , நம்முடைய முயசியில் இருக்கும் எதோ ஒரு சிறிய தவறை அகற்றி , அடுத்து நாம் எடுத்து வைக்கும் முயற்சியைச் சரியான திட்டமிடுதலுடன் , மிக நேர்த்தியாகச் செயல்பட்டால் வெற்றி நம் பக்கம் தான்.

ஏமாற்றத்தால் வரும் தளர்ச்சியை எப்படி நிவர்த்தி செய்வது. நாம் எத்தனையோ பிரச்சனைகளைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்று நினைத்து , நம்முடைய முயற்சியில் இருந்து விலகாமல் ஒரு புதிய உத்வேகத்தோடு செயல்பட்டால் நாம் இந்த தளர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விடலாம்.

உதாரணமாக தேயிலை செடியின் நுனியை வெட்டுவதும் , திராட்சைக் கொடியின் கிளைகளை வெட்டுவதும் அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அல்ல , அடுத்து வரும் கொழுந்தும் , திராட்சை கனியும் இன்னும் தரமுடன் வருவதற்காகத்தான் அது போல நாமும் தளர்ச்சியை கண்டு சோர்ந்து போகாமல் , நம்முடைய தளர்ச்சியை எல்லாம் ஒன்று சேர்த்து முயற்சியுடன் செயல்பட்டால் முன்பை விட நிறைவான வெற்றியைப் பெறலாம்.நம்முடைய தளர்ச்சிக்குப் பிறகு முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி மிகவும் மன நிறைவைத் தரும்.