தளர்ச்சியை நாம் இரண்டுவகையில் உணரலாம் ஒன்று உடல் ரீதியான தளர்ச்சி மற்றொன்று மன ரீதியான தளர்ச்சி. உடல் ரீதியான தளர்ச்சியை மருத்துவ முறையில் சரி செய்து கொள்ளலாம். மனத் தளர்ச்சியை ஆற அமர்ந்து யோசித்து சரி செய்து கொள்ளலாம். நம் மனத் தளர்ச்சியால் உடலும் தளர்ச்சியுறும். எனவே மனத் தளர்ச்சியின் போது துவண்டு விடாமல் மனதை திடபப்டுத்திக்கொண்டு செயல்பட்டால் வெற்றி கனியை பறிக்கலாம். நம் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கும் தலைவர்கள் எல்லாம் தளர்ச்சியயை உடைத்து எறிந்து வந்தவர்கள்தான். எந்த ஒரு சிறு வெற்றியும் தளர்ச்சி இல்லாத உழைப்பால்தான் கிடைக்கும்.
நமக்குத் தளர்ச்சி என்பது எப்பொழுது வருகிறது என்று பார்த்தால் நாம் ஏதோ ஒன்றில் தோல்வியைத் தழுவும் போது அல்லது நாம் நினைத்துச் செயல் படும் காரியங்களில் ஏமாற்றம் ஏற்படும் பொழுது. தளர்ச்சி ஏற்ப்படும், மனது வருத்தப்படும் என்பது உண்மைதான். நாம் அந்த நேரத்தில் பலவாறு குழம்பிப் போய் இருக்கலாம். நாம் எடுத்த தவறான முடிவால்தான் இந்த நிலைமைக்குத் தள்ளப் பட்ட்டுவிட்டோமா அல்லது நாம் தேர்ந்து எடுத்த பாதை சரிதான என்று வருத்தப்படலாம் , இந்த நேரத்தில் மனம் பலகோணங்களில் யோசித்து, நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீள முடியுமா மீண்டும் நமது இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர முடியுமா என்ற எண்ணங்கள் வரலாம். நாம் இந்த நேரத்தில் நம் தோல்வியை மட்டும் பாராமல் , அதற்கு முன் நாம் பெற்ற வெற்றிகளை நினைத்து பார்த்தல் நம்முடைய இந்த துயரத்தில் இருந்து வெளிவர அது உதவியாக இருக்கும்.
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். நாம் எடுக்கும் முயற்ச்சியில் தோல்வி ஏற்ப்பட்டால் சோர்ந்து போகாமல் , நம்முடைய முயசியில் இருக்கும் எதோ ஒரு சிறிய தவறை அகற்றி , அடுத்து நாம் எடுத்து வைக்கும் முயற்சியைச் சரியான திட்டமிடுதலுடன் , மிக நேர்த்தியாகச் செயல்பட்டால் வெற்றி நம் பக்கம் தான்.
ஏமாற்றத்தால் வரும் தளர்ச்சியை எப்படி நிவர்த்தி செய்வது. நாம் எத்தனையோ பிரச்சனைகளைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்று நினைத்து , நம்முடைய முயற்சியில் இருந்து விலகாமல் ஒரு புதிய உத்வேகத்தோடு செயல்பட்டால் நாம் இந்த தளர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விடலாம்.
உதாரணமாக தேயிலை செடியின் நுனியை வெட்டுவதும் , திராட்சைக் கொடியின் கிளைகளை வெட்டுவதும் அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அல்ல , அடுத்து வரும் கொழுந்தும் , திராட்சை கனியும் இன்னும் தரமுடன் வருவதற்காகத்தான் அது போல நாமும் தளர்ச்சியை கண்டு சோர்ந்து போகாமல் , நம்முடைய தளர்ச்சியை எல்லாம் ஒன்று சேர்த்து முயற்சியுடன் செயல்பட்டால் முன்பை விட நிறைவான வெற்றியைப் பெறலாம்.நம்முடைய தளர்ச்சிக்குப் பிறகு முயற்ச்சியால் கிடைக்கும் வெற்றி மிகவும் மன நிறைவைத் தரும்.