Thursday, September 25, 2008

உணர்வான உணர்ச்சி.

உணர்ச்சி என்பது என்ன?. வெளியில் இருந்து ஒன்று நம்மை எதாவது ஒரு விதத்தில் அதாவது தொடுதல் அல்லது நம் மனதைப் பாதிக்கும்படி நடக்கும் செயல் என்பது உணர்ச்சியாகும். உணர்ச்சி என்பது சில நொடிகள் , சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் தான் நீடிக்கும்.உணர்ச்சி என்பது உடலில் ஏற்படும் மாற்றம்.

உணர்வு என்பது ஓர் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு அதை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து , நாம் கொடுக்கும் வெளிப்பாடு. உணர்வு நம் மனதில் எப்போதும் ஓடும் ஒரு நிகழ்வு. உணர்வு என்பது மனதில் ஏற்ப்படும் மாற்றம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவை விட, உணர்ந்து எடுக்கும் முடிவே சிறந்தது என்று ஒரு பொன்மொழி உண்டு.

ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வேண்டும் இல்லை என்றால் அவன் இறந்தவனுக்குச் சமம். ஆனால் அவன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களை பாதிக்காதவண்ணமும் , அவனைப் பாதிக்காதவண்ணமுமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நாம் உடனே எடுக்கும் முடிவு பல பின்விளைவுகளை உண்டாக்கும். அது அவர்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பேச்சு , செய்யும் செயல் மற்றும் எடுக்கும் முடிவு நாம் அதை செய்யும் நேரம் சரி என்று தெரியும் .உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு மிகக்குறுகிய நேரத்தில் முடிந்து விடும். பின்னால் அந்த செயலை நினைத்துப் பார்த்தல் மிக கொடுமையான முடிவாக இருக்கும். இந்த சில மணித்துளிகள் ஏற்ப்படும் உணர்ச்சிகளால் சில நல்ல செயல்களும் நடைபெறும் , பல தவறான செயல்களும் நடைபெறும்.

உணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று , எல்லா மனிதர்களுக்கும் உணர்வு இருக்கும் . நம்முடைய உணர்வை யார் மதிக்கின்றார்களோ அவர்கள் நமக்கு மிகப்பெரியவர்களாக தெரிவார்கள். நம்முடைய உணர்வை யாரும் அதாவது நமக்கு உரிமைப் பட்டவர்கள் கூட மதிக்கவில்லை என்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். நம் மனதில் தோன்றும் அனைத்துமே உணர்வுதான். நம்முடைய உண்ர்வு மிக மிகச்சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உணர்வு தெளிவாக, உண்மையாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக பசி என்பது கூட ஓர் உணர்வுதான் , அந்த நேரத்தில் நமக்கு யார் உணவு தர முன்வருகின்றார்களோ அவர்கள் அந்த நேரத்தில் அவர் நமக்குத் மிகப்பெரிய ஆளாக தெரிவார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் நம் குடும்ப உறுப்பினர்களுடைய நல்ல ஆரோக்கியமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் குடும்பம் மிக அமைதியாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு மனைவி அவள் கணவனுடைய உணர்வை மதிக்க வேண்டும். ஒரு கணவன் அவன் மனைவியுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும்.ஒருவர் தன்னை போல் மற்றவருக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவேண்டும். இதில் வீணான தலைக்கனம் காட்டத் தேவை இல்லை. அப்பொழுதான் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

உணர்வும் , உணர்ச்சியும் தனித்தனியாக செயல்பட்டால் பிரச்சனை தான். நம்முடைய ஆரோக்கியமான உணர்வை வெளிப்படுத்த உணர்ச்சி தேவை. உணர்வு மட்டும் தனியாக இருந்ததால் பயனில்லை. உணர்ச்சியின் வெளிப்பாடு உணர்ந்து வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு குறுகிய நேரத்தில் எடுக்கும் முடிவு , நாம் எடுக்கும் தைரியமான முடிவு என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனம் அதன் பின்விளைவுகள் மிக அதிகமாக இருக்கும் . உணர்ந்து எடுக்கும் முடிவு தாமதமாக இருந்ததாலும் அதன் வெளிப்பாடு சரியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மக்களின் உணர்ச்சியுடன் கூடிய உணர்வான போராட்டம் பல வெற்றிகளை தந்திருக்கிறது. நம் குடும்பம் , நாடு , மொழி என்ற உணர்வு இருந்தால்தான் அதன் மேல் ஒரு பற்று வரும். நாம் சாதிக்க வேண்டும் , வாழ்வில் உயர வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் போதாது .அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே சாதிக்கலாம். எனவே உணர்வான உணர்ச்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்.

4 comments:

  1. இந்த பதிவு மட்டும் வாசித்தேன். பின்னுறீங்க. உங்களது மற்ற பதிவுகளையும் நேரம் ஒதுக்கி வாசிக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  2. Thambi, the difference between unarvu and unarchi super. All the very best. I am very proud of you.

    ReplyDelete
  3. Very Nice Post.. Keep it up...

    ReplyDelete
  4. தன்களது உனர்வன உனர்ச்சி உனர்ந்து ருசித்த பொழுது.என் உனர்வு நரம்புகள் உனர ஆரம்பித்தது உன்மையை

    நன்றி கலந்த நட்புடன் நாடி....

    ReplyDelete