Monday, September 8, 2008

பொலிவிழந்து வரும் கிராமங்கள்


கிராமங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று தோன்றும் வயல் வெளிகள், விவசாயிகளின் வாகனங்கள், ஆடுகள் , கோழிகள் , மாடுகள் , கருவேல மரங்கள், பசுமையான மரங்கள், கோவில் திருவிழாக்களில் நடை பெறும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு ,மிதி வண்டியில் வைத்துச் செய்யும் சிறு வியாபாரங்கள் , வானொலி சத்தங்கள், மண் தெருக்கள் , சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சத்தங்கள் , தெரு தண்ணீர் குழாய்ச் சண்டைகள், குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்கள் , பெட்டிக் கடைகள் , மாசு இல்லாத இரம்மியமான காற்று, நீரோடைகளில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் , அன்பான உபசரிப்பு, வைக்கோல் போர்கள், மாலை நேரத்தில் விவசாய வேலைகளை முடித்து விட்டு வந்து உறவினர்களோடும் , குழந்தைகளோடும் பேசி மகிழ்ந்து தங்கள் களைப்பைப் போக்கும் ஆண்கள்,ஊரின் ஒரு மூலையில் குழுவாகக் கூடி நிற்கும் வாலிபர்கள், குடிசைகள் , ஒரு சில பெரிய வீடுகள்,கூட்டுக் குடும்பங்கள் , எப்போதும் நடமாட்டம் மிகுந்த வீதிகள், பிரச்சனைகளைத் தங்களுக்குளே பேசித்தீர்த்துக் கொள்ளுதல். இப்படியெல்லாம் இருந்த கிராமங்கள் இப்பொழுது தங்கள் பொழிவை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.


கிராமங்களில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் , மாலைவேலையில் மற்றும் விடுமுறை நாட்களிலும் காலமுறை விளையாட்டுகளை விளையாடுவார்கள் ,
எடுத்துக்காட்டாக கண்ணாம்மூச்சி,கம்பு குச்சி, நொண்டி அடித்தல் , கயிறு தாண்டுதல் ,பம்பரம் ,கோலிகுண்டு இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. ஆனால் இப்பொழுது பள்ளி சென்று திரும்பும் சிறார்கள் , தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டை மட்டும் விளையாடுகிறார்கள். பழைய விளையாட்டுகளை மறந்து விட்டனர். பெற்றோர்களும் சிறார்களை வெளியே விட மறுக்கின்றனர். குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்களைப் பார்க்க முடியவில்லை, எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் ஆடு , மாடு , கோழிகள் வளர்ப்பதில்லை . அதை ஓர் இழி செயலாகப் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தினால் , விவசாயம் குறைந்து விட்டது. விவசாய நிலங்கள் வீடுகளாக , வணிக வளாகங்களாக மாற்றப்படுகின்றன.


தெருக்கள் அனைத்தும் சிமெண்ட் தெருக்களாக மாற்றபட்டுவிட்டன , கோவில் திருவிழாக்களில் பழைய பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு இல்லை ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகின்றன , வரும் உறவினர்களுக்கு அன்பான உபசரிப்பு இல்லை, வானொலி மாறி தொலைகாட்சிச் சத்தங்கள் , கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனித் தனியாக வாழ ஆரம்பித்து விட்டனர். மிதிவண்டிகள் குறைந்து மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன . தங்களுடைய சொந்தங்களுக்குளே விட்டுக் கொடுக்கும் அல்லது உதவும் மனப்பான்மை இல்லாமை , எதிர்ப்பார்புகள் பார்த்து அன்பு செலுத்துகிற எண்ணம் ,படித்தவர்கள் எல்லாம் தங்கள் குடும்பங்களை விட்டு நகரங்களுக்குச் சென்று வேலை செய்தல் , வெறிச்சோடிய வீதிகள் இப்படியே கிராமங்கள் நகரத்தனமாக மாறி வருகின்றன.



கிராமங்களில் மாற்றப் பட செயல்கள் பல இருக்கின்றன , கிராமங்கள் வளர்வது நல்லதுதான் , என்றாலும் இங்கு மனதுக்கு நிறைவான காரியங்களும் , மனதுக்கு அமைதியான செயல்களும் பல இருந்தன . எதாவது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால் உறவினர்கள் எல்லாம் அந்த வீட்டில் ஒன்று கூடி தாங்களே சமைத்து விருந்து செய்வார்கள். ஆனால் நகரங்களில் நட்சத்திர உணவகங்களைத் தேட வேண்டியது இருக்கும். இங்கு உறவினர்களோடும் , நண்பர்களோடும் பேசி மகிழ்வதால் கேளிக்கை விடுதிகள் தேவை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதால் மன அழுத்தம் இல்லை எனவே தியான மையங்கள் தேவைப்படுவதில்லை. கடுமையாக உடல் உழைப்பு இருப்பதால் உடற் பயிற்சிக்கூடம் தேவை இல்லை. இப்படியாக பல நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இயற்கையாகவே அமைந்து இருந்த கிராமத்தில் மக்களின் ஒரு சில பிடிவாத குணங்களால் கிராமங்கள் தங்கள் தொண்மையை இழக்கின்றன.




நகரங்களில் நமக்கு ஒரு சிறு பொருளைக்கூட பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் அதுபோலதான் அன்பும் . இது போல கிராமங்கள் மாறிவருகின்றன .

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது' என்றார் அண்ணல் காந்தி. அந்தக் கிராமங்கள் தான் இந்த நூற்றாண்டுக்குள் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.

இனி வரும் காலங்களில் கிராமச் சூழ்நிலைகள் எல்லாம் திரைப்படங்களில் மட்டும் காணும் நிலைமைக்குத் தள்ளப்பட உள்ளன.

கிராமங்கள் மற்றும் அதன் சூழ்நிலைகள் அழிவது அல்லது மாறுவது ஒவ்வொரு மனிதனின் ஆன்மா அழிவிற்குச் சமம்.அதை நாம் எவ்வாறு ஈடு செய்யப்போகிறோம்?.

1 comment:

  1. Thambi
    I am really very proud of you. I appreciate your maturity. You are gifted to state a very simple thing with a profound reflexion. Wish you all the very best.
    Bosco

    ReplyDelete