Showing posts with label religion. Show all posts
Showing posts with label religion. Show all posts

Monday, September 8, 2008

யாரிடம் கடவுள் ?




கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? அல்லது இல்லையா? என்ற வாதமும் அப்படி ஒருவர் இருந்தால் யார் உண்மையான கடவுள் என்ற வாதமும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த வாதத்திற்குச் செல்ல விரும்பவில்லை. கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் யாரிடம் இருப்பார்? அல்லது அவர் எப்படிப் பட்ட மனிதர்களின் மனதில் இருப்பார்? என்று நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் கடவுள் யாரிடம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் தொடர் வண்டியில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யும் பொழுது நான்கு பேர் இருக்கும் இடத்தில் இருவர் இருந்து கொண்டனர், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதத்தைத் தொடங்கினார்கள், இருவரும் தங்களுடைய புனித நூல்களை எடுத்துக் கொண்டு அதனுள் இருக்கும் வாசகங்களை எடுத்துக்கொண்டு வாதிட்டனர், ஒவொருவரும் தங்களுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று ஒருவர் மற்றொருவரைச் சம்மதிக்க வைக்க மிகவும் பாடு பட்டனர். பயணம் செய்த நாங்கள் எல்லோரும் இவர்கள் , தங்கள் கடவுளர் மீது எவ்வுளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தோம், சிறிது நேரத்தில் ஒருவர் உட்கார இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அருகில் சென்று அமர முயன்றார் அவர்களோ அவருக்கு இடம் தர மறுத்து விட்டனர். பக்கத்தில் இருத்த முதியவர் அவருடைய இருக்கையில் சிறிது இடத்தை அவருக்கு அமரக் கொடுத்தார், அவர்கள் இருவரும் அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பேசினார்களே தவிர , அவர்கள் மதம் போதிக்கும் ஒரு சிறிய நெறிமுறையக் கூடப் பின்பற்ற அவர்களுக்கு முடியவில்லை ,என்ன தான் அவர்கள் ,அவர்களுடைய கடவுளைப் பற்றிப் பெருமையாக பேசினாலும் , இந்த முதியவர்க்கு இருந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு இல்லை என்று பார்க்கும் போது இவர்கள் போலிகள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

இப்படியாக ஒவ்வொரு சிறிய செயல்களைப் பார்க்கும் பொழுது இவர்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறார்கள், என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆலயத்துக்குச் செல்கிறார்கள் நன்றாக , மிக பக்தியாக வழிபடுகிறார்கள் ஆனால் வெளியே வந்தால் , தம்மால் முடிந்த உதவிகளைத் தங்களுடைய சொந்தங்களுக்கு செய்ய மறுக்கின்றார்கள்.மற்ற சாதியினரைக் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள்.தங்களுடைய வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கிறார்கள் மதத்தைப் போதிக்கின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு உயர் பதவி அடைவதற்கு மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சாதரண மனிதர்களுக்கு இருக்கும் நல்ல பண்புகள் கூட இவர்களிடம் இல்லை. ஆலயங்களுக்குள்ளே பதவிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக எல்லா மதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் பார்த்தல் அன்பு,அமைதி , அடக்கம் போன்றவை தான் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைப் போதிக்கின்றவர்களும் , அவற்றைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் மதம் போதிக்கின்ற நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என்ற பார்த்தால் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இப்பொழுது நம் கண் முன்னால் நடக்கும் அனைத்துத் தீவிரவாத செயல்களும் , வன்முறைச் செயல்களும் மதத்தை முன் வைத்த நடக்கின்றன. இப்படி நடப்பதன் மூலம் அவர்களே அவர்கள் மதத்தின் மீது உள்ள நல்ல எண்ணங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.

இப்படியான போலி மதவாதிகளும், மதத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றாதவர்களும் இருக்கின்ற வரைக்கும் கடவுள் யாரிடம் இருக்க முடியும்?. தங்கள் மதங்களின் மீது பற்று இருக்க வேண்டுமே தவிர , வெறி இருந்தால் அது பிரச்சினைகளைத் தான் தூண்டி விடும்.

Friday, September 5, 2008

மதத்தால் மதம் பிடித்து அலையாதீர்.





உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத வரப்பிரசாதம் நமது நாட்டிற்க்குக்கிடைத்துள்ளது. எல்லா மதத்தினரும் ஒன்றாகப்பழகும் வாய்ப்பு நமக்குக்கிடைத்துள்ளது.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துவ மதம் அதிகமாக உள்ளது, அரபு நாடுகளில் இஸ்லாம் மதம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு மற்ற மதத்தினருடன் அதிக மாக பழக வாய்ப்பு இல்லை. ஆனால் நம் நாட்டில், தோன்றின சைவம், வைணவம் , சீக்கியம், புத்தம் போன்ற மதத்தினருடனும் வெளிநாட்டில் இருந்து வந்து பரவின மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மதத்தினருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்குக் கிடைத்த வரமாகும்.

ஆனால் இன்றைய மதத்தலைவர்கள் மதம் என்னும் போர்வையில் தங்களை மூடிக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்க்காக மக்களைப்பயன் படுத்திக்கொள்கிறார்கள். பொதுவாக மதத்தலைவர்களாக தங்களைக்கூறுபவர்களின் செயல்பாடுகள் தங்கள் மதத்திற்கு எடுத்துக்காட்டாக இல்லை. கிறிஸ்தவர்கள் அதிக மாக உள்ள நாடுகளை கிறிஸ்தவ நாடுகள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்றும் அறிவித்து உள்ளன. ஆனால் அவர்கள் நாட்டில் நடக்கும் வன்முறைகள் ,கலாச்சார சீரழிவுகள் மற்றும் செயல்பாடுகள் அவர்களின் மதத்தின் கோட்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக இல்லை.


நம் நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். ஒர் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் வருடத்திற்கு 10,000 பேர் மதக்கலவரங்களால் கொல்லப்படுகிறார்கள். மதத்தலைவர்கள் மக்களிடம் மத உணர்வைத்தூண்டிவிட்டு அதன் மூலம் அவர்கள் அரசியல் லாபம் அடையப்பார்க்கிறார்கள். எந்த மதக்கலவரத்திலும் எந்த மதத்தலைவரும் பலியானதாக தகவல்கள் இல்லை. அப்பாவி பொது மக்கள் தான் பலியாகிறார்கள். மதக்கலவரங்களால் இறந்து போகும் மக்களின் இரத்தத்தில் இவர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களின் ஆதாயத்திற்காக எபேர்ப்பட்ட பொய்களையும் சொல்லி மத கலவரங்களைத்தூண்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

தங்களைக்கிறிஸ்தவ நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள், பிற நாட்டில் உள்ள எண்ணெய் வளத்திற்காக அல்லது தங்களின் மேலாதிக்கத்திற்காக பிற நாடுகள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான உயிர்களைக்கொல்கிறார்கள். அவர்கள் நாட்டில் உள்ள ஆலயங்களில் "உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக" என்ற வார்த்தைகள் ஒலிக்கத்தான் செய்கின்றன.
தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துள்ள நாடுகள் புனிதப்போர் என்ற என்று சொல்லிக்கொண்டு தங்கள் மதத்திற்குள்ளேயே இன ரீதியான தாக்குதலை நடத்தி பல்லாயிரகணக்கான உயிர்களைப்பழிவாங்குகிறார்கள் , "இஸ்லாம் இனிய மார்க்கம்" என்று தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கான சுதந்திரத்தைக்கொடுக்க மறுக்கிறார்கள்.
ஒரு "சிறு உயிருக்குக் கூட துன்பம் விளைவிக்கக் கூடாது " என்று கூறிய புத்தரைப் பின் பற்றித்தங்களைத் துறவிகள் என்று கூறுபவர்கள் , பிற இனத்தின் மீதும் , அவர்களின் புனிதத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தி பல உயிர்களை எடுக்கிறார்கள்.
தங்களை இந்து மத சாதுக்கள் என்று கூறுபவர்கள் கையில் வேலோடும் , சூலாயுதங்க டும் இருக்கிறார்கள், தங்களின் பல பெரிய பழைய கோவில்கள் பராமரிப்பு அற்ற நிலையில் இருக்கும் போது , புதிய கோவில் கட்டுவதற்காக மற்ற மதத்தவர்களின் புனித தலங்களை இடிக்கிறார்கள். தங்கள் மதத்திற்குள்ளே இனப் பிரிவை ஏற்படுத்தி இன ரீதியான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

எல்லா மதங்களும் இந்த இரத்த வெறியைத்தான் விரும்புகிறதா !
ஒரு சிறிய செயல்களையும் , மத உணர்வைப் பயன்படுத்தி மிகப் பெரியதாக மாற்றி பல உயிர்களைப் பலிவாங்குவதைத்தான் எல்லா மத நம்பிக்கை உடையவர்களும் விரும்புகிறார்களா , எப்படி இந்தக் கொலைவெறியை மனதில் வைத்து கொண்டு இவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்.

எல்லா மதமும் அன்பைப் போதிக்கிறது என்று சொல்லிக்கொண்டு அதைப் பின்பற்றுபவர்கள் ஏன் பழிக்குப் பலியை விரும்புகிறார்கள்.

மதத்தால் மதம் பிடித்து அலையாமல் நமது சுய சிந்தனையுடன் , மற்றவர்களையும் நம்மை போல் நினைத்து மகிழ்வுடன் வாழ்வோம்.